January 02, 2021

முதல் புடவையும், அவன் வாசமும்

சில ஆண்டுகளுக்கு முன்:

 

இரண்டாம் சந்திப்பின்போது

அளித்த முதல் பரிசு

இந்தப் புடவை

 

புடவைக்கு பதில் பரிசு கேட்டேன்,

"அடுத்த சந்திப்பின் போது,

கட்டிக்கொண்டு வா" என்றான்

 

நடுநிசி தாண்டியும் உறக்கம் இல்லை

அறையெங்கும் அவன் வாசத்தோடு,

புதுப்புடவையின் வாசமும்

 

ஒரு மகா யுத்தத்திற்குப் பிறகு

எங்கிருந்தோ உறக்கம்  வந்தது.

கனவுகளில் வழக்கம் போல அவனே

 

ஒரு நீண்ட காலை நேர போராட்டத்திற்க்குப் பிறகு

நான் புடவை கட்டிகொண்டேன்

புடவை என்னைக் கட்டிக்கொண்டது

 

யாரோ என்னை இமைக்காமல் பார்க்கின்றார்கள்

அறை கண்ணாடிக்கு திடீரென

ஆயிரம் விழிகள் முளைத்துக் கொண்டனவோ?

 

ஒரு முறை கண்ணாடியில் எனைப் பார்த்துக்கொண்டேன்

நான் அழகா, இல்லை புடவை அழகா?

இருவருமே அழகுதான், அதுவும் கொள்ளை அழகு

 

அடுத்த நாள் சந்திப்பில்

ஒரு முழம் மல்லிகையோடு

காத்திருந்தான் அவன்

 

இமைக்க மறந்து விட்டானா, இவன்?,

வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது

வியர்வை ஊற்றில் முழுதுமாய் நனைந்து போனேன்

 

"இந்தப் பரிசு போதுமா" என்றேன்.

"இது போதாது, இப்படியே என் இல்லம் வந்துவிடு" என்றான்

என்னைக் கடத்தும் எண்ணத்தோடு வந்திருப்பான் போலும்

 

அவன் விழிகளில், நான் அவ்வளவு அழகு

என் விழிகளில், அவன் அவ்வளவு காதல்

என்னை விட, என் புடவையுடன் அவன் பேசியவை நிறைய

 

"அடுத்த புடவை, எப்போது?" என வினவினேன்

"தேவதை, உன்னை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்,

தொந்தரவு செய்யாதே" என்றான்

 

சில நிமிடங்களுக்கு முன்:

 

எப்போதோ கொடுத்த பரிசை

நேற்று இரவு, இரவல் கேட்டான்.

வழக்கம் போல, இரவல், இரவோடு

முடிந்து போகவில்லை

 

அந்த முதல் புடவையில்,

அவனுக்கு, ஆயிரம் கவிதைகள் ஒளிந்திருக்கும்

நான் தேடுவது என்னவோ, அவனின் வாசம் மட்டுமே ...