September 13, 2012

மாலை நேர தேநீரும், ஒரு மழை நேர தேவதையும் ....

சில நிமிடங்களுக்கு முன்னால், ஒரு பூகம்பம் ஏற்படுத்திய மங்கைக்காக இந்த வரிகள் ....

அரைகுறையாய் விழுந்த மழைத்துளிகளில் கால்பங்கு நனைந்து விட்டேன்..
மிதமான சூட்டோடு ஒரு குவளை தேநீர் கையில்...

சன்னல் திரைகளை நீக்குகிறேன்....

சாலையில் மங்கை ஒருத்தி மழைத்துளிகளை, தன் மென் உதடுகளைக் கொண்டு மிக வன்மையாய்  சபித்துக் கொண்டே நடந்து போகிறாள்...
அவள் மேல் விழுந்த துளிகள் எல்லாம், அழகு ரசம் பூசப்பட்டு அமிர்தத்துளிகளாய் மாறிக்கொண்டிருந்தன...
வேக வேகமாய் நடந்ததால், ஒரு அவசர கதியில் அவளின் கால்தடக் கோலங்கள் வரையப்பட்டன...
இதுதான் சமயம் என்று தென்றலும், அவளின் ஆடையுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தது...

உலகம் மறந்து போனேன்... கவிஞன் பிறந்தான்... அவளின் ஒரு பார்வை கிடைத்து விடாதா, தவமிருந்தன விழிகள்...
பார்வை எல்லை சுருங்க ஆரம்பித்தவுடன், இதயம் தறிகெட்டு ஓட ஆரம்பித்தது... என் ஏக்கத்தை, ஏமாற்றம் கேலி செய்தது...

எப்படியோ அவளுக்கு என் அழுகை கேட்டு விட்டது போலும்...
என் எல்லையில் இருந்து மறையும் முன், பக்தன் எனக்கு ஒரு கடைக்கண் பார்வையை வீசி விட்டு போனால் அந்த தேவதை...

ஒற்றை நிமிடத்தில், ஒரு நூறு முறை இறந்து போயிருந்தேன்...
இறுதி வினாடியில் அவள் பார்த்த பார்வையில், திரும்பி வந்த உயிரோடு மீதம் இருந்த தேநீரைப் பருக ஆரம்பித்தேன்... 

No comments:

Post a Comment