September 27, 2021

நேரம்: காலை 6.22


இன்னும் கொஞ்ச நேரம் 

இவள் என் அணைப்பிலேயே இருக்கட்டுமே

கதிரவனே, கொஞ்சம் தாமதிக்கக் கூடாதா?

இன்னுமொரு இரண்டு நிமிடம் கட்டிக்கொள்கிறேன்


இவள் என்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றாள்

இவளின் புடவையை

நான் சுற்றிக்கொண்டிருக்கின்றேன்.

கட்டிக்கொள்வதை கட்டிக்கொண்டேன்


எப்போதும் போல

அதே மூன்று கூந்தல் இழைகள்

என் முகம் மீது பரவிக்கிடக்கின்றன.

எங்கெங்கும் மல்லிகை வாசனை


இரவெல்லாம் நாம் பேசிய கதைக்கு

இந்த பௌர்ணமி நிலவே சாட்சி.

கதை இல்லா இரவுகளில் 

பாவம் நிலவு தேய்ந்து போகத்தான் செய்கின்றது


என் கன்னங்கள் சிவந்து போயிருக்கின்றன

அவளின் குங்குமச் சிவப்பா?

இல்லை இதழ்ச் சிவப்பா?

அறையெங்கும் மீத வெட்கங்கள்


இவளுக்கு கனவுகள் வருவதில்லையா?

கனவுகளில் நான் வருவதில்லையா?

இப்போதெல்லாம் நடு இரவுகளில்

என் பெயரை முணுமுணுப்பதே இல்லை


மூச்சுக்காற்று மோதிக்கொள்ளும் இடைவெளிதான்,

எனினும் விழிகளில் தேடாமல்

விரல்களினால் தேடுகின்றாள்.

அரையடிக்குள் ஒரு கண்ணாமூச்சி


வெட்க ராகங்கள் படைப்பவள் இவள்

வெட்கியே ராகங்கள் படைப்பவளும் இவளே.

இவளை இசைக்கப் படைக்கப்பட்ட 

ஒரு அற்புதக் கலைஞன் நான்


உன்னை ஏமாற்றுவது 

அவ்வளவு சுலபம் இல்லை போலும்,

முழு நித்திரையிலும் 

என் கள்ளம் கண்டுகொள்கிறாய்


இப்போது புதிதாய் தொடங்குவதா?

இல்லை, இரவின் மீதத்தை தொடரவா?

இது வழக்கம்போல மனதோடு மல்லுக்கட்டும் நேரம்

நேரம் காலை 6.22

September 15, 2021

உன்னையும் இந்தக் காதல் சபிக்கட்டும்

 

வெறும் ஒற்றை வாக்கியம்

ஆயிரமாயிரம் ஒத்திகைகள்

உன்னிடம் என் காதலைச் சொல்ல


நிலைக்கண்ணாடி முன்

நிலைகுலைந்த நிலையில் தினமும் நான்,

சிறிதேனும் தைரியம் இல்லை 


நீ எனைக் கடந்து போகையில்

இருதயம் எங்கும் ஒரு பிரளயம்,

ஏதேனும் உன் செவிகளில் விழுகின்றதா?


நீ நடந்து செல்லும் பாதையில்

உன் பாதச்சுவடுகளை தேடுவதே

எனக்கு தினமும் வேலையாய் இருக்கின்றது


நீ விடும் மூச்சுக்காற்றில்

என் தேகம் பற்றி எரிகிறது

நீயோ எனை கண்டுகொள்வதே இல்லை


நீ தாமதமாகும் வினாடிகளில்

என் விரல் நகங்களுக்கு 

மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன


காதோர ஒற்றை முடியில்

என்னைக் கட்டிப்போட்டுவிடேன்,

உன் மல்லிகையில் நான் மயங்கிப்போகிறேன்


உன் வளையல்களை 

கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லேன்,

நான் சுவாசிக்க மறந்து போகின்றேன்


எனக்கும் இரவுக்கும்

தினமும் இங்கே மல்யுத்தம்,

கனவில் வர கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?


என்றைக்காவது ஒரு நாள்

இந்தக் காதல் உன்னையும் சபிக்கும்.

அந்த நாள் வரை 

நானும், என் காதலும் 

உன்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருப்போம்



September 13, 2021

அவளுக்கென்ன, அழகிய முகம்


ஒரு முழுமையடைந்த ஓவியம், ஒரு முழுமையடைந்த கவிதை அவளின் இந்த முகம்


விழிகளில் ஒரு மொழி

இதழ்களில் ஒரு மொழி

எப்போதும் தடுமாறுபவன் நான் 


இதழ்களைச் சுழித்து

இமைகளை உயர்த்தி 

எனை நொறுங்கச் செய்பவள்


அவள் உதிர்க்கும் வார்த்தைகள்

காற்றிலேயே கரைந்து போகும்.

பிறகெப்படி நான் கேட்பது?


அவளின் இதழ் ரேகைகளெங்கும்

என் ஏக்கங்கள் 

எனும் சோகக் கதைகள்


விழிகளின் மெய் மறைக்கும் இதழ்கள்

இதழ்களின் மெய் மறைக்கும் விழிகள்

இவள் ஒரு மாபெரும் வித்தைக்காரி


புகைப்படத்தில், அவள் அழகி

நேரில், அவள் ஒரு பேரழகி

அழகினால் மிரட்டுபவள் அவள்


அவள் முகம் போதும்

இந்த ஆயுள் முழுதும்.

வேறு எதுவும் தேவையில்லை எனக்கு


அழகைக் அடிக்கடி கூட்டாதே,

எனக்கிருப்பது ஒரு இருதயம் தான் 

இன்னும் எத்தனை தாங்குவது?


இப்படிக்கு ,

உனைக் காதலிப்பதற்காகவே படைக்கப்பட்ட நான்

March 10, 2021

அடுத்த சனிக்கிழமையும், அவன் வரும் கனவுகளும்

ஒரு சனிக்கிழமை காலை நேரம்:

கடந்த சந்திப்பிற்கும், இந்த சந்திப்பிற்கும்

இடைவெளி என்னவோ ஒரு வாரம்-தான்.

ஆனால், அது உண்மையில் ஒரு யுகம்

 

என்னைச் சந்திக்க வந்தவனை

ஓடிக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

அவன் எனக்கானவன்,

யாரைக் கேட்க வேண்டும்?

 

கடந்த முறை போல, இந்த முறையும்

என் பிரியமான எழுத்தாளரின்

கவிதைத் தொகுப்பு, பரிசாய்.

எனக்குக் காதலிக்க கற்றுத் தருகிறான் போலும்

 

அவன் இதழ்களில் தெரிந்தது ஒரு வறுமை

ஒரு வாரத்தில் மிகவும் ஏங்கி இருக்கின்றான்

வெறும் தொலைபேசி முத்தங்களில்

அரைகுறையாய் உயிர் வாழ்ந்திருக்கின்றான்

 

என்ன பேசுவது இவனிடம்?

இரவு முழுதும் ஒத்திகை பார்த்தேன்.

எங்கே அந்த வார்த்தைகள்?

வெட்கமே, நீ ஒழிந்து போ

 

என் மௌனமும், அவன் மௌனமும்

யுத்தம் நடத்த ஆரம்பித்தன.

சட்டென்று கரம் பற்றிக் கொண்டான்,

நடக்க ஆரம்பித்தோம், மௌனம் கலையட்டும்

 

"என்னடி, இவ்வளவு அழகாய் இருக்கிறாய்?"

எனக்கு மட்டும் கேட்கும் படி ஒரு கேள்வி.

அவ்வளவுதான், நான் தோற்றுப்போனேன்.

இவன் காதலுக்கு, எப்போதுமே நான் அடிமை

 

வழக்கமான வினாவுடன் ஆரம்பித்தேன்

"என்னை, எவ்வளவு காதலிக்கிறாய்?".

கரத்தை இன்னும் இறுக்கிக் கொண்டான்.

அது சரி, இவனுக்கு காதலிக்கக் கற்றுத் தரவேண்டுமா என்ன?

 

அவன் வந்த கனவுகளின்

வெட்கக் கதைகள் பற்றிச் சொன்னேன்.

நான் இல்லாத இரவுகளின்

சோகக் கதைகள் பற்றிச் சொன்னான்.

 

நான் இல்லாத இரவின் வெறுமையை

என் தொலைபேசி முத்தங்கள் கொண்டு நிரப்புவான்

சில நிமிடங்களில்,

மீண்டும் நிரப்பச் சொல்லும் கயவன் இவன்

 

இப்படியே கரம் கோர்த்து

வாழ்நாள் முழுதும் இருக்கக் கூடாதா?

ஒரு முகவரி இல்லா

தேசம் போவோமா?

 

விழிகளும், விரல்களும்

நிறைய பேசியதாய் ஞாபகம்

எங்கள் மௌனங்கள், முழுதாய் உடையும் முன்

தூரத்தில் அவனுக்கான பேருந்துச் சத்தம்

 

கை ரேகைகள் பிரிக்கப்படும்

ஒரு சத்தம் கேட்கின்றது.

எங்கிருந்தோ ஒரு அழுகை

எட்டிப் பார்க்கின்றது.

 

பிரிய மனமில்லாமல் பிரிந்து,

அழுக்குப் பேருந்தில்

தொற்றிக்கொண்டே சொன்னான்

"மீண்டும் கனவில் சந்திப்போம்"

 

அறைக்கு வந்து

அடுத்த சனிக்கிழமை காலை நேரத்திற்கும்

அவன் வரும் கனவுகளுக்கும்

காத்திருக்க ஆரம்பித்தேன்

 

 

January 02, 2021

முதல் புடவையும், அவன் வாசமும்

சில ஆண்டுகளுக்கு முன்:

 

இரண்டாம் சந்திப்பின்போது

அளித்த முதல் பரிசு

இந்தப் புடவை

 

புடவைக்கு பதில் பரிசு கேட்டேன்,

"அடுத்த சந்திப்பின் போது,

கட்டிக்கொண்டு வா" என்றான்

 

நடுநிசி தாண்டியும் உறக்கம் இல்லை

அறையெங்கும் அவன் வாசத்தோடு,

புதுப்புடவையின் வாசமும்

 

ஒரு மகா யுத்தத்திற்குப் பிறகு

எங்கிருந்தோ உறக்கம்  வந்தது.

கனவுகளில் வழக்கம் போல அவனே

 

ஒரு நீண்ட காலை நேர போராட்டத்திற்க்குப் பிறகு

நான் புடவை கட்டிகொண்டேன்

புடவை என்னைக் கட்டிக்கொண்டது

 

யாரோ என்னை இமைக்காமல் பார்க்கின்றார்கள்

அறை கண்ணாடிக்கு திடீரென

ஆயிரம் விழிகள் முளைத்துக் கொண்டனவோ?

 

ஒரு முறை கண்ணாடியில் எனைப் பார்த்துக்கொண்டேன்

நான் அழகா, இல்லை புடவை அழகா?

இருவருமே அழகுதான், அதுவும் கொள்ளை அழகு

 

அடுத்த நாள் சந்திப்பில்

ஒரு முழம் மல்லிகையோடு

காத்திருந்தான் அவன்

 

இமைக்க மறந்து விட்டானா, இவன்?,

வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது

வியர்வை ஊற்றில் முழுதுமாய் நனைந்து போனேன்

 

"இந்தப் பரிசு போதுமா" என்றேன்.

"இது போதாது, இப்படியே என் இல்லம் வந்துவிடு" என்றான்

என்னைக் கடத்தும் எண்ணத்தோடு வந்திருப்பான் போலும்

 

அவன் விழிகளில், நான் அவ்வளவு அழகு

என் விழிகளில், அவன் அவ்வளவு காதல்

என்னை விட, என் புடவையுடன் அவன் பேசியவை நிறைய

 

"அடுத்த புடவை, எப்போது?" என வினவினேன்

"தேவதை, உன்னை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்,

தொந்தரவு செய்யாதே" என்றான்

 

சில நிமிடங்களுக்கு முன்:

 

எப்போதோ கொடுத்த பரிசை

நேற்று இரவு, இரவல் கேட்டான்.

வழக்கம் போல, இரவல், இரவோடு

முடிந்து போகவில்லை

 

அந்த முதல் புடவையில்,

அவனுக்கு, ஆயிரம் கவிதைகள் ஒளிந்திருக்கும்

நான் தேடுவது என்னவோ, அவனின் வாசம் மட்டுமே ...