November 26, 2020

இரண்டாவது காதல் கடிதம்

 கடந்த ஆண்டு எழுதிய உனக்கான முதல் காதல் கடிதம், இன்னும் என்னிடமே இருக்கின்றது. இந்த பொல்லாத காதல், என் தைரியத்தை பறித்துக் கொண்டது. தினமும் நூறு முறை அதை நானே வாசித்துக் கொள்கிறேன்.

நித்திரை இல்லா பல இரவுகள், என்னை இரண்டாவதாய் ஒரு கடிதம் எழுதத்தூண்டின. சில ஆயிரம் ஒத்திகைகளுக்குப் பிறகு, இதோ உனக்கான என்னுடைய இரண்டாவது காதல் கடிதம்.

--------------------------------------------------------------------------------------

 தேவதைகளின் தேவதைக்கு,

 

நமது வகுப்பறையின்

வண்ணத்துப்பூச்சி நீயடி,

பிரம்மன் படைக்கும் போதே

நிச்சயம் பிரமித்திருப்பான்

 

நீ அணைத்துக்கொண்ட

புத்தங்கங்களில்

உள்ள எழுத்துக்களோடு சேர்ந்து

மயங்கிப் போனவன் நான்

 

இயற்பியல் ஆய்வகத்தில்

உன்னால் ஏற்பட்ட

வேதியியல் மாற்றங்கள்

ஆயிரமாயிரம்

 

விடுமுறை நாட்களிலும்,

நீ வகுப்பறைக்கு

வராத நாட்களிலும்

நான் வாழாமல் போயிருக்கிறேன்

 

மிகச் சாதாரணமாய்

நீ இதழ் சுழித்த கணங்களில்,

எனக்குள்

மின்சாரம் பாய்ச்சப்பட்டது

 

நம் மகளிர் விடுதி

வழித்தடத்தில்

உன் காலடித்தடம் தேடாத

நாட்கள் இல்லை

 

நீ இல்லாத

என் கனவுகள் இல்லை,

நீ கொல்லாத

என் இரவுகளும் இல்லை

 

கள்ளத்தனமாய்

உன் இதழ்களைக் காணும்போது,

கொஞ்சம் முத்தங்கள்

யாசகம் கேட்கத் தோன்றும்

 

வெட்கத்திற்கு

வெட்கம் கற்றுத் தருபவள் நீ,

ஆடவன் எனை

வெட்கப்பட வைப்பவளும் நீ

 

நீ இல்லாத

இந்த நீண்ட இரவுகள்,

என்னை மரித்தது போதும்.

என்னை மீட்டெடுக்க வா

 

எப்போதடி சம்மதம் சொல்வாய்?

 

இப்படிக்கு,

உனைக் காதலிப்பதற்காகவே படைக்கப்பட்ட நான்

 

பின் குறிப்பு:

விழி மூடி சம்மதம் சொல்லவும்.

இதழ் திறந்து சொல்லாதே. உன் இதழ் காணும் தைரியம் எனக்கு ஒரு போதும் இல்லை

November 12, 2020

இது காதலாய் இருந்திடுமோ?

 உன் வெட்கங்களும், 

என் தயக்கங்களும்

நம் எதிரிகள்.

- இது காதலாய் இருந்திடுமோ !!

September 24, 2020

நான், அவன் மற்றும் அவனின் வெட்கங்கள்

 மங்கை எனக்கு

வெட்கம் ஒன்றும் புதிதல்ல,

தினம் தினம் அவனால்

புதிய புதிய வெட்கங்கள்

 

அதெல்லாம் சரி,

என்னை வெட்கப்பட வைப்பவனுக்கு

வெட்கப்படத் தெரியுமா?

எப்போது அவன் கடைசியாய் வெட்கப்பட்டான்?

 

திருமணத்திற்கு முன் ஒரு நாளில்

ஒரு முத்தம் கேட்டேன்,

அய்யோ, போடி என்றான்

அவன் குரலில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

இன்னொரு நாள்

எனைக் கட்டிக்கொள்ள சொன்னேன்

இன்னொரு நாள் பார்ப்போம் என்றான்

அவன் கைகளில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

பேருந்துப் பயணத்தில்

ஒட்டிக் கொள்ளச் சொன்னேன்

இல்லை பரவாயில்லை என்றான்

அவன் தோள்களின் தெரிந்தது அவனின் வெட்கங்கள்


மழை நாளில்

குடைக்குள் ஒட்டிக் கொள்ளச் சொன்னேன்

பெரிதாய் மழை இல்லை என்றான்

அவன் கால்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

என் உள்ளங்கை ரேகைகளை

அவன் விரல்களால் வாசிக்கச் சொன்னேன்

ஒரே வினாடியில் வாசிப்பு முடிந்தது

அவன் விரல்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

எனக்கும் அவனுக்கும் இருந்த

இடைவெளியைக் நீக்கச் சொன்னேன்

இன்னும் தள்ளிப் போனான்

அவன் மூச்சில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

அவனின் ஒற்றை விரலில், என் மீது

ஓவியம் வரையச் சொன்னேன்

அவன் ஓவியம் ஆகிப் போனான்

அவன் நகங்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

மணமான நாளில்

என் வெட்கத்தை உடைக்கச் சொன்னேன்

என்னிடம் தோற்று, என் வெட்கத்திடமும் தோற்று

இறுதியாய் அவன் வெட்கிப்போனான்


நானும், என் வெட்கமும் 

அவன் வெட்கத்திடம் 

எப்போதுமே தோற்றுப் போவோம்

 

அவனை வெட்கப்பட வைப்பதை விட

வேறென்ன வரத்தை

இந்தக் காதல் தந்துவிட முடியும்?

July 19, 2020

என் கல்லூரி விடுதி அறையும், கள்வன் நீயும்

கதவின் பின்புறத்தில் இருக்கும்
உன் புகைப்படம்
இதுவரைக்கும் என்னிடம்
ஆயிரம் முத்தங்களையாவது வாங்கி இருக்கும்

எத்தனை முறை
இந்த புகைப்படம் வழியே,
நான் வெட்கப்படுவதை
நீ  பார்த்திருப்பாய்?

நானும் நீயும் பேசுவதை
ஒட்டுக் கேட்பதற்காகவே
இந்த சுவரெங்கும் முளைத்திருந்தன
நூறு செவிகள்

இந்த அறையின்
கண்ணாடிக்குத் தெரியும்
உன்னிடம் நான் பேச நினைத்ததின்
ஒத்திகைகளும், வாக்கு மூலங்களும்

கனவுக்கும் நித்திரைக்கு
நான் சண்டையிடா நாட்கள் இல்லை
என் தலையணை அறியும்
அந்த நிகழ்வுகளை

சன்னல் மூலையில் இருந்த
மர மேசையெங்கும்
உன் பெயரும் என் காதலுமே
இழையோடி இருக்கின்றன

என் புத்தகங்களுக்கு இடையே
உன் காதல் கடிதங்கள்
என் ஆடைகளுக்கு இடையே
உன்னிடம் திருடிய கைக்குட்டைகள்

அறையின்
ஒற்றைச் சாவியில்
உன் பரிசான
இரட்டை காதல் புறாக்கள்

ஆடை மாற்றும் தருணங்களில் எல்லாம்
உன்மேல் வரும் சந்தேகம் -
இந்த முறை
எங்கே ஒளிந்திருப்பான் இவன்?

உனக்கு அடிமையாகிப்போன
என் தனிமை நிமிடங்கள்,
இந்த இரவுக்கு மட்டுமே
தெரிந்த இரகசியங்கள்

இப்படிக்கு,
-  கள்வனைக் காதலித்த தேவதை ஒருத்தி

July 15, 2020

உன் மௌனம்

என் விரல் நகங்களின்
மரண தண்டனைகள்,
உன் மௌனத்தால் எழுதப்படுகின்றன.

May 28, 2020

உன் கெட்டி மேளமும், என் மௌனமும்


இதே நாள் - சில வருடங்களுக்கு முன்:


மழை பெய்ய ஆரம்பித்த

ஒரு முன்னிரவில்

என்னை உனக்கும், உன்னை எனக்கும்

அறிமுகம் செய்ய ஆரம்பித்து

 

மழைத் துளிகள் ஓய்ந்து போய்

கீழ் வானம் சிவக்க ஆரம்பித்த வேளையில்

நம்மை நமக்கு

அறிமுகம் செய்து முடித்தோம்

 

இந்த நாள் - பின்னர் வந்த ஏதோ ஒரு மாதத்தில்:

 

நீண்ட இரவைக் கடந்து

மெல்லமாய் விடிந்த

ஒரு வியாழக்கிழமையில் நிகழ்ந்தது

நம் முதல் சந்திப்பு

 

அதன் பின்

நிறைய முதல் சந்திப்புகள்

நிறைய முதல் வெட்கங்கள்

நிறைய முதல் முத்தங்கள்

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

வாரம் முழுதும்

காதல் கிழமைகள்,

மாதம் முழுதும்

காதல் தினங்கள்

 

உன் வெட்கத்தில்

தொலைந்து போனேன் நான்

என் விழிகளில்

தொலைந்து போனாய் நீ

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

சந்திப்புகளின் இடைவெளிகளை

ஏக்கங்கள் நிரப்பின,

ஏக்கங்களின் இடைவெளிகளை

சந்திப்புகள் நிரப்பின

 

கொள்ளை கொள்ளையாய்

என்னால் நீ காதலிக்கப்பட்டாய்

முத்த முத்தங்களால்

உன்னால் நான் நிரப்பப்பட்டேன்

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

நீ அருகில் இருந்த நிமிடங்கள்

எனக்கு சொர்க்க நிமிடங்கள்.

நாம் பயணித்த பேருந்தைக் கேள்

அது கவிதைகள் சொல்லும்

 

நீ அருகில் இல்லா நிமிடங்கள்,

எனக்கு நெருப்பு நிமிடங்கள்.

என் இரவுகளைக் கேள்

அவைகள் கதைகள் சொல்லும்

  

இந்த நாள் - பின்னர் வந்த இறுதி மாதத்தில்:

 

ஏதோ ஒரு நாளில், காரணமேயின்றி

நீயும் நானும் சிறை வைக்கப்பட்டோம்

நானும் நீயும் தண்டிக்கப்பட்டோம்

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

 

'நாம்' எனும் கவிதை உடைக்கப்பட்டு

நான், நீ எனும் எழுத்துக்கள்

தனித்தனியே சிதறடிக்கப்பட்டன

மொழி அழிக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டன

 

இதே நாள் - இந்த வருடம்:

 

உன் கெட்டிமேள ஓசையில்

இறந்து பிறந்த

என் மௌனத்திற்கு இன்று

பிறந்த நாள்

 

காலங்கள் பல கடந்தும்

உனக்கான என் மௌனம்

உன் பெயரை உச்சரிப்பதை இன்னமும் நிறுத்தவில்லை

நிறுத்தவும் போவதில்லை, தொடரும் …


May 21, 2020

மூன்று தோழிகள், மூன்று மகள்கள்


முதல் தோழி:

மதிய இயற்பியல் வகுப்புகளின்
துயில்களை விரட்டியவள் அவள்

நான் வாங்கிய 40-க்கும் அவள் வாங்கிய 99-க்கும்
தினமும் சண்டை வளர்த்தவள் அவள்

எனக்கும் சேர்த்து பசித்தவள்,
எனக்கும் சேர்த்து சமைத்தவள் அவள்

என்னையும், என் பழைய மிதிவண்டியையும்
பண்டிகை தவறாமல் அலங்கரித்தவள் அவள்

நிலவு கேட்டவனுக்கு முப்பது நாட்களும்
முழுமதி கொடுத்தவள் அவள்

இரண்டாம் தோழி:

என் எழுத்துக்கள் பிறக்கும் முன்பே
அவைகளை காதலித்தவள் அவள்

மருதாணிக்கும், வெட்கத்திருக்கும்
சிவக்கக் கற்றுத்தந்தவள் அவள்

அவள் மணநாளிலும் கூட
எனக்கான துணை தேடியவள் அவள்

என் வானவில்லுக்கும், நிழலுக்கும்
வர்ணங்கள் தீட்டியவள் அவள்

என் வார்த்தைகளில் ஒளிந்து கொண்டு
முழு அர்த்தங்கள் தருபவள் அவள்

மூன்றாம் தோழி:

நான் தினமும் ரசிக்கும்
எனக்கான முதல் ரசிகை அவள்

எனக்கான புது மொழிகளை
மௌனம் கொண்டு படைப்பவள் அவள்

என் தனிமைகளை, என்னோடு இணைந்து
தனிமையாக்கியவள் அவள்

என் மண நாளை என்னை விட
நிறைய கொண்டாடுபவள் அவள்

என் தனித்தீவில் தினமும்
திருவிழாக்கள் நடத்தியவள் அவள்

ஒருத்தி 'அன்பின் இளவரசி'
இன்னொருத்தி 'வெட்கத்தின் இளவரசி'
மூன்றாமவள்  'அழகின் இளவரசி'

மூன்று தோழிகளும்,
மறு பிறவியில்
மூன்று மகள்களாய்ப் பிறக்கட்டும்

பிறகு நான், மூன்று தேவதைகளின் தகப்பன்.
எனக்கென்று ஒரு கர்வம்,
எனக்கென்று ஒரு ஆணவம்.

இங்கே மூத்தவள், இளையவள் சண்டைகள் இல்லை.
மூவருமே கடைக்குட்டிகள்.
மூவருமே என் தேசத்து இளவரசிகள்.

மறுபிறவியில் நான்
'மூன்று தேவதைகளின் தகப்பன்'.

February 24, 2020

மீண்டும் சந்திக்கும் வரை
இந்த முத்தங்களை வைத்துக்கொள்
- நீ, நான் மற்றும் முன்பு ஒரு நாள்

February 13, 2020

உன்னைக் காதலித்துக்கொண்டே இருப்பதுதான்
என் தவமும், அதற்கான வரமும்

February 03, 2020

என் தோழிக்கு, மணமாகி விட்டது



ஒரு நீண்ட இசைக்குப் பிறகு
மேளதாளங்கள்
அமைதியாகின்றன

ஒரு நீண்ட வாழ்த்துகளுக்குப் பிறகு
உதடுகள்
அமைதியாகின்றன

உனக்கு மணமாகி விட்டது

மணமாலையோடு
இன்னும் நீ அழகாய் இருக்கின்றாய்

யாருக்கும் புலப்படாத
ஒரு அச்சம் கலந்த உற்சாகம்
உன் விழிகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது

இரவோடு இரவாக
சிவந்து போன மருதாணி
உன்னுடைய வெட்கத்தை
அப்படியே வைத்திருக்கின்றது

மகிழுந்து ஒன்று
மலர் சூடி உனக்காக
வாசலில் காத்திருக்கின்றது

அம்மாவின் அழுகை
கண்ணீரோடும்
அப்பாவின் அழுகை
கண்ணீரில்லாமலும்
உன்னை வழியனுப்ப தயாராகி விட்டன

உன் தங்கை
அழத்தெரியாமல்
அழத்தொடங்கி விட்டாள்

எனக்கு அழத் தெரியாது
நீ எனக்கு அழ கற்றுத் தரவில்லை

கட்டி வைத்த வாழை மரத்தை
துணைக்கு அழைத்துக் கொண்டு
மௌனமாய்
உன் விழிகளை
வாசிக்க முயற்சிக்கின்றேன்

இரண்டு துளிகளை
உதறிய உன் விழிகளுக்கு
மூன்றாவது துளியை
உதறித்தள்ள மனமில்லை போலும்
நனைந்த உன் விழிகள்
ஆயிரம் கதைகளை
இந்த உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன

முதல் நாள்
பள்ளி செல்லும் குழந்தை போல்
உன் கால்கள் தடுமாறுகின்றன

உன்னுடைய "போயிட்டு வரேன்" என்பதிற்கும்
அம்மாவின் "எப்போடி வரே" என்பதிற்கும்
எத்தனை போராட்டங்கள்
எனக்குத் தைரியம் இல்லை அவற்றைக் காண

யாரோ ஒருவர்
இந்த போராட்டங்களை
முடித்து வைக்கிறார்,
அந்த மகிழுந்து மெதுவாய்
வெளியே செல்கின்றது

மகளின் திருமணத்தில்
தகப்பனுக்கும்
தங்கையின் திருமணத்தில்
அண்ணனுக்கும்
கிடைக்கும் ஒரு பேசப்படாத வெறுமை
தோழியின் திருமணத்தில்
தோழனுக்கு கிடைக்கத்தான் செய்கின்றது

தோழியின் திருமணத்தில்
அவளின் தோழர்கள்
காரணத்தோடும்
காரணமில்லாமலும்
எதையோ இழக்கின்றார்கள்
எதையோ பறிகொடுக்கின்றார்கள்

மோதிக்கொண்ட மௌனங்கள் உடைந்து போன நான், நம் கடைசி சந்திப்பு
கடைசி சந்திப்பில் பிறக்கின்றன நிறைய முதல் கவிதைகள்
கடைசி சந்திப்பில் முதல் சந்திப்புகள் மரணமடைகின்றன
பதிலே இல்லாத ஆயிரம் கேள்விகள் பிறக்கும் நிமிடம், நமது இந்த கடைசி சந்திப்பு
கடைசி சந்திப்பின் மௌனம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது
நிமிடத்தை நிறுத்தி வைப்போம் இன்னும் இன்றைய நாளுக்கான முத்தக்கணக்கு முடிக்கப்படவில்லை
நீ என் முத்தங்களைத் திருப்பித்தர வேண்டியதில்லை, நானே திருடிக் கொள்கின்றேன்
கட்டிக்கொள்ளத்தானே உன்னைக் கட்டிக்கொண்டேன். பிறகெதற்கடி கேள்வி? இது கேள்விக்கான நேரமில்லை