July 31, 2012

அடுத்த பூகம்பத்திற்கு, இன்னும் முப்பதே வினாடிகள்....


முப்பது வினாடிகளுக்கு முன்:

என் இதயத் தண்டவாளத்தை
உன் இரயில் இன்னொரு முறை கடந்து சென்றது
செல்களில் மெலிதாய்ப் பரவியது ஒரு நிலநடுக்கம்
மெதுவாய் எனைக் கடந்து போனாய் நீ

முப்பது வினாடிகள் கழித்து:

வெறும் மூன்றடித் தொலைவுதான்
உனக்கும் எனக்கும்,
உன் தோழி ஒருத்தியிடம்
ஏதோ பேச ஆரம்பிக்கிறாய்.

இனிவரும் பூகம்பளுக்கான
விதை விதைகின்றன உன் செய்கைகள்,
இன்றைக்கு என்ன
ஆகப்போகிறதோ என் மனது

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

மெலிதான உன் விரல் நகங்கள்
மிக மெலிதாய் உன்னிடம் வெட்டுப்படுகின்றன,
என் உயிர் எனும் மரத்தை
யாரோ கோடாரியால் வெட்டுகிறார்கள்

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

முகத்தில் ஊஞ்சலாடும் இரு முடிகள்
வேக வேகமாய், உன் காதோடு அணைக்கப்படுகின்றன
உன் காதல் ஊஞ்சலில்
ஆடும் குழந்தையாகிறேன் நான்

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

அடம் பிடிக்கும் குழந்தையாய் உன் துப்பட்டா,
சரியும் போதெல்லாம், சரி செய்கின்றன உன் விரல்கள்
உன் துப்பட்டாவின் சிறு சரிவில்
என்னில் பெரும் நிலச் சரிவுகள்

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

உன் இரு இமைகளுக்கு நடுவே
மீண்டும் முத்தங்கள் பரிமாறப்படுகின்றன,
உனக்கான என் இதழ்களில் தெரிகிறது
ஏக்கமும், வறட்சியும்

இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:

முப்பது வினாடிகளுக்கு ஒரு முறை
என்னுள் நடக்கிறது இந்த அழகு பூகம்பம்,
எந்த அளவு கோலில் அளப்பது
உன் அழகையும், என் பூகம்ப அலகையும்?

என் பத்து திசைகளிலும்
நீ என்னும் அழகுதான்,
ஆகமொத்தத்தில் நீதான் 'அழகின் அழகும், அலகும்'

July 25, 2012

உன் காதல்
நான் தேடும் சந்தோசம்,
என் காதல்
உன்னைத் தேடும் சந்தோசம்,
நம் காதல்
நம்மைச் சேர்க்கும் சந்தோசம்

ஒரு பிறப்பும், ஓராயிரம் மறுபிறப்பும் ...


நள்ளிரவு 12.00 மணி:

நம் மகனின் அவசர அசைவுகளை
உன் கரங்களின் வழியே உணர்கிறேன்,
தகப்பனைக் காணத் தவிக்கும் தவிப்பு
என் தவிப்பையும் மிஞ்சுகிறது

திடீரென உனக்குள்ளே ஒரு பிரளயம்,
புரிந்துவிட்டது, இது நம் மகன் உதிக்கப்போகும் நேரம்
இரு கைகளால் ஏந்துகிறேன் இரட்டை உயிர்களை
இறக்கை இல்லாமலே பறக்கிறேன் மருத்துவச்சியிடம்

நள்ளிரவு 1.00 மணி:

உன் இரு கரங்களின் இறுக்கத்தில்
தாய் உன் வலியை உணர்கிறேன்.
வலியால் துடிக்கும் உனைக் காண
ஆண்மகன் எனக்குத் தைரியமில்லை

உருவமில்லா பயமும், தவிப்பும்
என் கழுத்தின் மேலே நடனம் ஆடுகின்றன
அறைக் கதவுகள் மூடப்படுகின்றன
தனியே தவிக்க விடப்படுகிறேன்

பின்னிரவு 2.00 மணி:

நகங்களோடு விரல் சதைகளும்
என் பற்களால் கொலை செய்யப்பட்டன
மனதெங்கும் நடுக்கமேனும் ஒரு மின்சாரம்
பாய ஆரம்பித்திருந்தது

என் செல்களின் மீது
யாரோ நெருப்பு மூட்டி இருந்தார்கள்
வாசலின் மீது கண்களும்
வாசலின் வழியே கால்களும் ஓடிக்கொண்டிருந்தன

பின்னிரவு 3.00 மணி:

ஒரு மணிக்குள்
ஆயிரம் முறை இறந்து பிறந்துவிட்டேன்
கன்னங்களின் மீதிருந்த உன் முத்தத் தடங்களை
என் கண்ணீர் ஆறு அழித்திருந்தது

நாத்திகன் எனக்கு
யார் யாரோ தெய்வம் ஆனார்கள்
மதம் பிடித்த யானையை மிஞ்சியது
என் இதயத்தின் துடிப்பு

அதிகாலை 4.00 மணி:

இரத்தம் உறைந்து போய்விட்டது
நரம்புகள் அறுந்து போய்விட்டன
கொஞ்சம் கண்ணீரும்
நிறையக் காதலும்தான் மீதம்

உன்னால் மகனுக்கு வலியா?
இல்லை அவனால் உனக்கு வலியா?
இரண்டு வலியும் இங்கே ஒன்றாய்
என் உயிரில்

அதிகாலை 5.00 மணி:

வாசல் திறக்கிறது
வலியில் மீதமான கண்ணீருடன் நீ
இரத்தமும் சதையுமாய் நம் மகன்,
அழுகை எனும் ராகத்துடன்

யாருக்கு இப்போது என் முத்தங்கள்?
ஆளுக்கு ஆயிரமாய் வைத்துக்கொள்ளுங்கள்
அணைத்துக் கொள்கிறேன் உன்னையும் சேர்த்து
முத்தங்களும் கண்ணீரும், பேசட்டும் மீதக் கதைகளை

July 23, 2012

உன் கடைசி 'முதல் முத்தம்' ...

என் மொட்டுகளுக்களின்
கதவுகளை யாரோ தட்டுகிறார்கள்
மெதுமெதுவாய் மலர்கின்றன அவைகள்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் செல்களின்
துடிப்பை யாரோ வேகப்படுத்துகிறார்கள்
மெது மெதுவாய் வெடிக்கின்றன அவைகள்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் இரத்தத்தின்
நிறத்தை யாரோ மாற்றுகிறார்கள்
மெதுமெதுவாய் நடக்கிறது வர்ணஜாலம்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் சிலையின்
கண்களை யாரோ திறக்கிறார்கள்
மெதுமெதுவாய் உயிர்வருகிறது எனக்கு
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் மேகங்களின்
பாதையை யாரோ மாற்றுகிறார்கள்
மெதுமெதுவாய் பொழிகின்றன உன் மேலே
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் தேசங்களின்
எல்லைகளை யாரோ திருடுகிறார்கள்
மெதுமெதுவாய் இணைகின்றன ஒரே தேசமாய்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் விண்மீன்களை
நிலவாக யாரோ மோட்சிக்கிறார்கள்
மெதுமெதுவாய் புலர்கிறது ஒரு முழுமதி(கள்) நாள்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் வெட்கங்களை
கள்ளத்தனமாக யாரோ ரசிக்கிறார்கள்
மெதுமெதுவாய் சிவக்கின்றன உனக்காக
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் கவிதைகளை
இசையால் யாரோ உருமாற்றுகிறார்கள்
மெதுமெதுவாய் பிறக்கின்றன காதல் கீதங்கள்
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

என் இதழ்களை
உனக்காக யாரோ ஏங்க விடுகிறார்கள்
மெதுமெதுவாய் நடக்கிறது ஒரு முத்த அணைப்பு
- இது இன்னொரு 'முதல் முத்தம்'

பின் வந்த ஏதோ ஒரு நாளில்தான் தெரிந்தது
அது இன்னொரு முதல் முத்தமல்ல
அதுவே உன் கடைசி 'முதல் முத்தம்'

காதல் உயிரோடும், காயங்கள் காலத்தோடும்
கரைந்து போயிருந்தும்
'முதல் முத்தங்கள்', இன்னும் 'முதல் முத்தங்கள்' தான்

July 18, 2012

நம் காதல் காவியத்தில்
ஒரு வெற்றுப் பக்கம்
- இது ஆடி மாதம்
மடிந்து போன
என் விரல் நகத் துணுக்கள் சொல்லும்,
மடிந்து போய்க்கொண்டிருக்கும்
என்னுடைய சோகத்தை
- இது ஆடி மாதம்

July 16, 2012

'ஆடி' எனும் இரண்டே எழுத்துக்கள்
நம் காதல் கவிதை மொழியின்
மற்ற எழுத்துக்களை மௌனமாக்கி விட்டது
- இது ஆடி மாதம்
நீ வரைந்த கோலத்தில்
இணைக்காமல் விட்டுவிட்ட
இரு புள்ளிகள் நீயும் நானும்
- இது ஆடி மாதம்
நீயே பறித்து நீயே வைத்துக் கொள்ள
எதற்கு மருதாணி இலைகள்?
நீயே பறித்து நீயே சூடிக் கொள்ள
எதற்கு மல்லிகள் இதழ்கள்?
வறட்சியில் நானும் அவைகளும்
- இது ஆடி மாதம்
உனக்கும் எனக்கும் இடைவெளி
32 நாட்கள்,
ஆனால் நமக்குள்ளான இடைவெளியோ
32 யுகங்கள்
- இது ஆடி மாதம்

July 15, 2012

மலராமல் வாடுகின்றன
கொல்லைப்புற மல்லிகை மொக்குகள்,
மலர்ந்து வாடுகின்றோம்
என் நீயும், உன் நானும்
- இது ஆடி மாதம்
தேன் நிலவிற்கும்
இங்கே ஒரு தேய்பிறை
- இது ஆடி மாதம்
மௌன ஏக்கங்களும்
ஏக்க மௌனங்களும் தான்
இப்போது நம்மிடையே
- இது ஆடி மாதம்
'நாம்' என்ற நாம் இப்போது
நானகவும், நீயாகவும்
- இது ஆடி மாதம்

July 12, 2012

நம் சமையலறைப் பக்கங்கள்....


திங்கட்கிழமை

உன்னை உதவிக்கு அழைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
சமையல் வாசம் அறிய அழைத்த நான்
உன் வாசத்தில் மயங்கிப் போனேன்

கடுகுகள் சிவக்கும் முன்னே
என் கன்னங்கள் சிவந்து போயின
வேகவேகமாய்
நானும் சமையலறை வெப்பமும் அணைந்து போனோம்

செவ்வாய்க்கிழமை

உன்னை நம்பி மருதாணி பூசியதுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
என் கரங்களுக்கு பதிலாய் உன்னை அழைத்த நான்
உன் கரங்களின் எல்லைக்குள் சிறைபட்டுப் போனேன்

வாணலியில் வெப்பம் பரவும் முன்னே
உன் அங்கமெங்கும் மருதாணி பரவியது
வேகவேகமாய்
நானும் நீயும் சிவந்து போனோம்

புதன்கிழமை

உன்னை ஒரு ஓவியம் வரையச் சொன்னதுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
தூரிகையும் வண்ணங்களையும் இல்லாமல்
நீ வரையும் ஓவியமாய் நான் ஆனேன்

உவர்ப்பும் இனிப்பும் இங்கே
வர்ணங்கள் ஆகின
வேகவேகமாய்
நீயும் உன் தீண்டலும் ஓவியங்கள் ஆனோம்

வியாழக்கிழமை

களைப்பான உன்னை தேநீர் பருக அழைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
கூடுதல் இனிப்புக்காக என் உதடுகளை
கரைத்த இனிப்பாய் நான் ஆனேன்

சர்க்கரை திருட வந்த எறும்புகள்
சிலைகள் ஆகின
வேகவேகமாய்
என் இதழ்களும் உன் இதழ்களும் இனிப்புகள் ஆனோம்

வெள்ளிக்கிழமை

உன்னை சமையலறையில் இருந்து ஒதுக்கி வைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
உன்னைத் தனியாய் போகச் சொன்ன நான்
தனிமையில் வாடிப் போனேன்

என் கழுத்தின் பின்னே
உன் மூச்சுகளின் பிம்பங்கள் இல்லை
வேகவேகமாய்
நானும் என் மூச்சும் உடைந்து போனோம்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை

என் ஐந்து நாட்களை
உன் இந்த இரண்டு நாட்கள்
எளிதாய் தோற்கடித்து விடுகின்றன

நீ இல்லாமல் நான் வரையும்
கோலங்களை விட,
நீயும் நானும் வைக்கும் புள்ளிகள் தான்
இங்கே நம் காதலின் சின்னங்கள்

கல்லிலும் கடவுள், தூணிலும் கடவுள்
எனும் பக்தனைப் போல்,
கணவன் உனக்கு
எங்கேயும் காதல் தானடா

July 11, 2012

உன் இதழ்கள், இங்கே தூரிகை
உன் வெட்கம், இங்கே வண்ணம்
என் கன்னத்தில், உன் ஓவியங்கள்
- என் கன்னங்களும், உன் முத்தங்களும்
இன்னொரு முத்தமொன்று வேண்டாம்
இன்னொரு 'முதல் முத்தம்' கொடேன்
- என் கன்னங்களும், உன் முத்தங்களும்
சேமிக்கக் கற்றுக் கொள்ள வருகிறாய்
செலவு செய்ய கற்றுத் தருகிறேன்.
செலவு செய்யக் கற்றுக் கொள்ள வருகிறாய்
சேமிக்கக் கற்றுத் தருகிறேன்
- என் கன்னங்களும், உன் முத்தங்களும்

July 10, 2012

நிலவு நீ, பாதையோரக் கிணறு நான்.
விழுந்த உன் அமைதி பிம்பத்தை
சிறைபிடிக்கத் துடிக்கிறது, என் அலை மனது
- உனக்கும் எனக்கும் ஏனோ ஒரு தொலைவு

July 09, 2012

உன் நகப்பூச்சிற்கும், உன் உதட்டுச் சாயத்திற்கும்
இடையே நடக்கிறது வண்ணத்தின் அழகுப் போட்டி,
பட்டத்தை வெல்கிறது உன் வெட்கச் சிவப்பு
மாதங்கள் எனும் பிரிவுகள் தொலைந்து
என் ஆண்டின் எல்லா நாட்களுமே
இனிமேல் கார்த்திகை தீப நாட்கள்தான்
- நீ எனும் ராகம், இரவு எனும் பாடல்
நம் முத்தங்களின் ஞாபகமாய்
நீ வைத்த நட்சத்திரப் புள்ளிகள்,
நீ இல்லாத இந்த இரவில்
என்னை ஞாபகத்தில் கொள்கின்றன
-  இது நீ இல்லாத இன்னொரு இரவு

July 08, 2012

வெளியே பெய்யும் மழைக்கும்
உள்ளே இருக்கும் வெப்பத்திற்கும்
இடையே வாயிற்படியில் வலியோடு நான்
-  இது நீ இல்லாத இன்னொரு இரவு

July 06, 2012

கொடியில் காயும்
உன் நனைந்த புடவையின் உரசலில்
பற்றி எரிகிறது என் தேகம்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
நீதான் என் நோய்,
நீயேதான் என் மருத்துவமும்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
கடைசிப் பேருந்தும் சென்று விட்டது,
விடியலா? நடையா?
வர்ணம் போன இரவில், குழப்பமாய் நான்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு

July 04, 2012

உன் தகப்பன் வீட்டில் ஒரு நாள்.....


காலை 7.௦௦ மணி - நம் படுக்கையறை

விழிகள் தேடும் முன்னே, என் விரல்கள் தேடுகின்றன உன்னை
மெதுவாய் உணர்கிறேன், இது உன் தகப்பன் வீடு..
கண்களையும், என் கைகளையும் எச்சரிக்கிறது என் மனசாட்சி
இன்றைக்கு எல்லை மீறக்கூடாது

காலை  9.00 மணி - வீட்டு முற்றம்


விவசாயத் தொழிலாளர்களுக்கு கட்டளையாய்
உன் அப்பாவின் கணீர்க் குரல்
எங்கோ இருந்து காற்றில் வரும் உன் அழைப்புக்கு
அடங்கிப் போகிறார் உன் அப்பா

முற்பகல் 11.00 மணி - வீட்டு சமையலறை


நீ இருப்பதால் இன்னும் நிறைய நன்வாசம் வீசுகிறது
உன் வீட்டு சமையலறை,
வழக்கம்போல நீ தான் முதலில் ருசிக்க வேண்டும்
தவமிருக்கிறார்கள் உன் அம்மாவும், சமையலறையும்

பகல் 1.00 மணி - உணவுண்ணும் அறை

வழக்கம் போல உனக்கு ஊட்டிவிட
உன் அப்பாவும் அம்மாவும் ஏங்குகிறார்கள்,
அருகே அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை என் பெயரில்
யாரோ அமைத்திருக்கிறார்கள் ஒரு செயற்கை வேலியை

பிற்பகல் 3.00 மணி - உன் வீட்டுத் தோட்டத்தின் கிணற்றடி

தோட்டத் தொழிலாளர்களின் கண்களின் தெரிகிறது
உன் பேரழகும், உன்னைப் பிரியும் ஏக்கமும்
உன் தடவலில் மலரும் மலர்ச் செடிகளில்
நீ பிரிவதின் வலியை உணர்கிறேன்

அந்திப் பொழுது  5.00 மணி - உன் வீட்டுக் கொல்லைப் புறம்

கூந்தல் முழுதும் நீ மலர் சூடியும்
வேலைக்காரியின் இன்னொரு மலருக்கும் தருகிறாய் ஒரு இடம்
இனிமேல் யார் வந்து இந்த மொக்குகளுக்கு
மலராகும் வரம் தருவார்?

மாலை  7.00 மணி - உன் அம்மாவிற்கு பிரசவம் பார்த்த ஒரு பாட்டியின் வீடு

உனக்கு முதன் முதலாய் முத்தம் அளித்தவள் இவள்,
இன்னொரு முத்தத்திற்கு இவளுக்கு பஞ்சமா என்ன?
அன்பாய்க் கட்டளை இடுகிறாள் அவள்
'உண்டானவுடன் இங்கே வந்துவிடு... உனக்கும் நான்தான் பிரசவம் பார்க்க வேண்டும்'

இரவு 9.00 மணி - உன் வீட்டு வாசல்

உன் மாமியாரைப் பற்றி அக்கறையாய்
விசாரிக்க உன் பள்ளித் தோழிகள் கூட்டம்
ஒட்டு மொத்தமாய் எல்லோரின் அடுத்த கேள்வி
'இரவுகளில் மாப்பிள்ளை எப்படி?', வெட்கமாய்ச் சிவக்கிறாய் நீ

இரவு 11.00 மணி - மீண்டும் அதே படுக்கையறை

நடந்த கதைகளை விவரிக்க ஆரம்பிக்கிறாய்
இன்னும் முத்த கணக்கை ஆரம்பிக்காமல்
அமைதியாய் இருக்கும் என்னிடம், நீ வினவுகிறாய்
'காலையில் இருந்து உங்களுக்கு என்னாயிற்று?'

அமைதியாய் என்னிடமிருந்து வார்த்தைகள் வருகின்றன
'உன்னை நான்தான் தேவதையாய் வாழ வைக்கப் போகிறேன்
எனும் என் தலைக்கனம் அழிந்து போய் விட்டது.
பிறந்த நாளில் இருந்தே நீ தேவதை தானடடி'

மார்பில் சாய்ந்துகொண்டே சொல்கிறாய்
'இதைவிட எனக்கு வேறு சொர்க்கம் வேண்டுமா என்ன?'

July 02, 2012

மூன்று 'கால் நிமிடங்கள்'.....


கண்களின் இமைகளுக்கு நடுவே சந்தோசம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த ஒரு காலை நேரம்... இமைகளை மூட எனக்கு ஆசையில்லை...
சற்று முன்பு மலர்ந்த ஒரு மல்லிகை போல் இருக்கிறாய் நீ....அணிந்திருந்த மலர் மாலையிலிருந்து, இன்னும் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது...

தேன் தடவிய நிமிடங்களுக்கு நடுவே, உன் கழுத்தில் நான் தாலி கட்டி முடித்திருக்கிறேன்... என்னைச் சுற்றலிலும் என்ன என்னவோ நடந்து கொண்டிருந்தும், மனம் எதிலும் ஒட்டவில்லை.. இவ்வளவு அழகா நீ? விழிகளால் நம்ப முடியவில்லை...

கூட்டத்திலிருந்து யாரோ அழைக்கிறார்கள்... அக்னி வலம் வர வேண்டுமாம்.... நம் காதலுக்கு அக்னி சாட்சி வேண்டுமா என்ன? வரங்கள் வாங்குவதற்கு எதற்க்குச் சாட்சி? என்னிடம் இருந்து எதை வேண்டுமானாலும், என் என்னை வேண்டுமானாலும் கூட எடுத்துக் கொள்ளுங்கள்... இவள் இருக்கிறாள் எனக்காக.....

உன் புடவைக்கும், என் வேஷ்டிக்கும் விழுகிறது ஒரு முடிச்சு... இப்படியே இருக்கட்டும் இந்த முடிச்சு ... பின்வரும் நாளில் நம் மகளுக்கு, இதைக் காண்பிக்க வேண்டும்....என் ஒற்றை விரலை, உன் விரலோடு யாரோ கட்டுகிறார்கள்.... மற்ற விரல்களில் ஏக்கங்கள், மண்டப சத்தத்தில் மறைந்து போகின்றன....

என் காதலுக்கும், உன் மௌனத்திற்கும் 
சில ஆண்டுகளாய் நடந்த போர் முடிவுக்கு வந்த நிமிடம்.
இமைகள் மூடி முதல் சம்மதம் சொன்னாய்... 
பின் வந்த நாட்களில், வேறு சம்மதங்களுக்காக நீ இதழ்கள் மூடியது வேறு கதை

என் மனதில் இந்த நிமிடம் ஓடி முடித்த புள்ளியில், முதல் வலமும் முடிந்து போனது....இரண்டாம் வலம் ஆரம்பிக்கும் புள்ளியில், என் பெற்றோர்களைக் கவனிக்கிறேன்... ஒரு தேவதையைக் கடத்திப் போன பெருமிதம் தெரிகிறது அவர்களின் கண்களில்... உன் பெற்றோரையும் கவனிக்கிறேன்... அனேக ஏக்கங்கள் ஒரு கண்ணில், அனேக சந்தோசங்கள் மறு கண்ணில்... என் சிரிப்பு அவர்களுக்கு உணர்த்தி இருக்கும் 'நீ என் சொர்க்கத்தின் தேவதை ஆகப் போகிறாய் என்று'

இரண்டாம் சுற்றின் இந்த கால் நிமிடத்தில், என் நினைவில் வருகிறது, நம் மணமேடையின் ஒரு நிமிடம்

என் ஏக்கங்களுக்கும், உன் வெட்கங்களுக்கும்
சில நிமிடங்களாய் நடந்து வந்த தித்திப்பு உச்சகட்டமான நிமிடம்,
மலர்கள் பொழிய மாங்கல்யம் சூடிய கணம்
சொந்தங்கள் மறந்து, உன்னை மட்டுமே நான் வேடிக்கை பார்த்தது வேறு கதை

கனவு கண்டு முடிப்பதற்குள், இரண்டாம் சுற்று முடிந்து விட்டது... மணவறை இன்னும் கொஞ்சம் நீளமாய் இருக்கக் கூடாதா? இரண்டாம் சுற்றிற்க்கும், மூன்றாம் சுற்றிற்க்கும் இருக்கும் சிறு இடைவெளியில் நம் நண்பர்கள் கண்களில் படுகிறார்கள்... உன் வெட்கத்தை உன் தோழிகளும், என் அமைதியை என் தோழர்களும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்... நானும் கடைக் கண்ணில், உன்னை ரசித்துக் கொள்கிறேன்...

மூன்றாம் சுற்றின் இந்த கால் நிமிடத்தில், என் நினைவில் வருகிறது, நம் பின் நாளின் ஒரு நிமிடம்

என் தவத்திற்கும், உன் தாய்மைக்கும்
சில மாதங்களாய் துளிர்ந்திருந்த மொட்டு, இன்று மலரும் நேரம்,
வலிகளுக்கு நடுவே நம் மகளின் அழுகை கேட்ட நேரம்
சுற்றம் சொந்தங்கள் மறந்து, உன்னையும் நம் மகளையும் முத்தங்கள் கொண்டு அணைத்தது வேறு கதை

யாரோ வருகிறார்கள், நம் விரல்களைப் பிரிக்க... வேண்டாம், நான் இவளோடு இந்த உலகையும் வலம் வர வேண்டும்... 
வேறு என்ன வேண்டுமடி எனக்கு? இந்த மூன்று கால் நிமிடங்கள் போதும், இன்னும் முப்பது ஜென்மங்களுக்கு....

July 01, 2012

முத்தத்தை நீளச் சொல்லி நான்
இரவை நீளச் சொல்லி நீ,
- நீ எனும் இரவு, நான் எனும் நிலவு