December 29, 2008

உன்னைத்தவிர வேற எந்த ஆசையும்
எனக்கு வேண்டாம் என்பதே
என் நீண்ட நாள் ஆசை
நீ என்ற ஆசைக்கு
ஆசைப்பட்டு எனக்கு,
நாம் என்ற சொந்தம்
வரமாய்க் கிடைத்தது
எனக்கு நீ ஆசை,
உனக்கு நான் ஆசை.
நம் காதலுக்கோ நாம்தான் ஆசை
ஆசைப்படாதே
என்று புத்தர் சொன்னார்,
நீ என் ஆசையாய் இருக்கும்போது
நான் எப்படி ஆசைப்படாமல் இருக்க முடியும்?
எல்லாவற்றிக்கும்
நான் ஆசைப்படவில்லை,
எல்லாமே நீயாக ஆசைப்படுகின்றேன்

December 28, 2008

நான் வைக்கும்
எல்லா செல்ல பெயர்களும்
நீ சொல்லும் போடா என்ற
ஒரு வார்த்தையைப்போல் வருவதில்லை
உன் ஒவ்வொரு
செய்கையைப் பார்க்கும்போதும்
உனக்கு ஒரு செல்ல பெயர்
வைக்கத் தோன்றுகிறது,
எங்கே போவது அத்தனை பெயர்களுக்கு?
உனக்கு நான் வைத்த
சரியான செல்ல பெயர் வெட்கம்
அதுதான் உனக்கே உரித்தானதும்
உன்னில் நான் தேடுவதும்
உனக்கு புதிதாய்
ஒரு செல்ல பெயர் வைத்தேன்,
அதே பெயரில் காவியங்கள்
எழுத உலக கவிஞர்களும் தயார்
ஏ அழகே,
உனக்கு என்ன செல்ல பெயர் வைப்பது?
சரியான கேள்விதான்,
அழகுக்கு என்ன செல்ல பெயர் வைக்கமுடியும்?

December 23, 2008

நீ என்னைப்பற்றி யோசிக்கும்
தருணங்களில்
உனக்குத் தெரியாமல்
உன்னை ரசிக்கவேண்டும் என்பது
என் நீண்டநாள் கனவு
நம்மைப்பற்றி யோசிப்பதா?
நம் காதலைப்பற்றி யோசிப்பதா?
எனக்குத் தெரியவில்லை.
இப்போது நீ என்ன யோசிக்கிறாய்?
நீ நம் காதலைப்பற்றி யோசிக்கும்போதுதான்
அது இன்னும் அழகாகிப்போகிறது
நீ நம்மைப்பற்றி
சிந்திக்கும் கணங்கள்தான்
நான் சுவாசிக்கும் நேரங்கள்
நீ எப்படியெல்லாம்
என்னைப்பற்றி சிந்திப்பாய் என்று
நான் உன்னைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்
காத்திருந்த என் தனிமைக்குத் தெரியும்
என்னுடைய காதலின் ஆழம்
நான் காத்திருக்கிறேன் என்று
நீ சீக்கிரம் வந்துவிட வேண்டாம்.
அப்புறம் நான் உனக்காக காத்திருக்கும்
சுகத்தை இழந்து விடுவேன்
என்னை இப்படி காத்திருக்க வைக்கவாவது
நீ என்னை காதலித்தே ஆகவேண்டும்
கொஞ்ச நேரம்தான் காத்திருந்தேன்
என்று பொய் சொல்லத்தான்
இவ்வளவு நேரம் காத்திருக்கிறேன்
நீ இன்னும் வராததால்
நானும் என் நீண்ட நேரமும்
உனக்காக காத்திருக்கிறோம்

December 22, 2008

உலகின் வேறு வேறு திசையில்
இருக்கும் நம்மை இணைக்கும்
நம் காதலின்
இன்னொரு முகம் இந்த மின்னஞ்சல்
என் அவ்வளவு பெரிய காதலை
எப்படி இந்த சின்ன
மின்னஞ்சலுக்குள் அடக்குவது?
இந்த தொலைபேசி
உன் முத்தங்களை சத்தங்களாகவும்
இந்த மின்னஞ்சல்
வெறும் வார்த்தைகளாகவுமே தருகின்றன
நீ அனுப்பிய மின்னஞ்சலுக்கு
நீ எழுதியபோது பட்ட வெட்கங்களை
என்னிடம் சேர்க்க தெரியவில்லையே!
நீ அனுப்பும் காதலை
விட்டு விட்டு
வெறும் வரிகளை மட்டும்
சுமந்து வருகிறது
இந்த பொல்லாத மின்னஞ்சல்

December 18, 2008

உன் தொலைபேசி அழைப்புமணிக்கு
காத்திருப்பதும் கூட
ஒரு சுகமேதான்
என்னைத் திருடிப்போக
நீ ஒண்ணும் வர வேண்டாம்
உன் தொலைப்பேசி
அழைப்புமணி போதும்
நீ அழைக்காத நேரங்களில்
உன் அழைப்புமணியும்
நானும் பேசிக்கொள்வோம்
உனக்கு கால்கட்டு போடக்காத்திருக்கும்
என்னைக் கட்டிவைத்திருப்பது
உன் தொலைபேசி மணி
உன்னோடு கனவில் இருக்கும் என்னை
உன் நினைவுக்குக் கொண்டுவருவது
நீ அழைக்கும்
உன் தொலைபேசி அழைப்புமணி
உன்னுடன் சில நிமிடங்கள் மட்டும்
பேசினால் மட்டும் போதும்
நான் பல யுகங்களைப் பெற்றுவிடுவேன்
எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்
உன் இத்தனை அழகையும்
என் இத்தனை சந்தோசங்களையும்?
ஏ அன்பே,
நீ பேசும் வார்த்தைகளில்தான்
நான் தேடும் அத்தனை சந்தோஷங்களும்
கிடைக்கின்றன
உன் சிரிக்கும் முகம்
பார்த்து வளரும் நிலவு
உன் மௌன முகம்
பார்த்து தேய்கிறதோ?

December 16, 2008

உன் பயணத்தில்
உன்னைதொட்டுத் தழுவும் இளம்காற்றை
என் வீட்டுச் சிறையில்
அடைத்து வைத்திருக்கிறேன்
நீ பயணம் போகையில்
எதிர்த்திசையில் காற்றும்
உன் திசையில் என் நினைவுகளும்
ஓடிக்கொண்டிருக்கும்

December 15, 2008

உனக்கு மூன்று வேலை
பூஜை செய்வதே
நான் முழுவேளையும்
உன்னை நினைக்கத்தான்
ஊர் வாழ உன் பெயரை
அர்ச்சனை செய்யும் அர்ச்சகன் நான்,
ஆனால் வரங்களை மட்டும்
நீ எனக்குக் கொடுத்துவிடு
நான் தவமிருக்கிறேன் என்று
நீ வரம் தந்து விடாதே
வரம் வாங்கிய பின்
நான் தவம் செய்ய மறந்து போகக்கூடும்
நீ தெய்வமாய் இருக்கும்
கோவிலின் அர்ச்சகரும் நானே,
மற்றவருக்காக அர்ச்சனை செய்யும் போதும்
உன் பெயரையே சொல்லிக்கொண்டிருப்பேன்
நான் நீ தெய்வமாய் இருக்கும்
கோவிலுக்கு நேர்ந்து விட்ட உயிர்
உனக்காக மட்டும்தான் நான்

December 10, 2008

உன் புடவைத்தலைப்பில் இருந்துதான்
என்னுடைய எல்லா கவிதைகளும்
ஆரம்பிக்கின்றன
கணவனுக்கு மனைவி
ஓதுவது தலையணை மந்திரம்,
நீயோ எனக்கு
சேலை மந்திரம் ஒதிப்போனாய்
ஏய் அழகு,
உன்னைக்கட்டிக்கொள்ள
எந்த சேலைக்குத்தான் பிடிக்காது சொல்லு!!!
நீ ஏற்றி வைக்கிறாய் என்பதற்க்காக
எண்ணையே இல்லாமல் எரிகின்றன
இந்த பொல்லாத தீபங்கள்
காற்றின் திசையில் எரியாமல்
நீ நடந்து போகும்
திசையை நோக்கி எரிகின்றன
நீ வைத்துப்போன தீபங்கள்
தீப ஒளியில்
இருள் மறைந்து போவதைப்போல்
உன் நினைவுகளில்
என் பாரங்கள் தொலைந்து போகின்றன
நீ வைக்கும்
கார்த்திகை தீபங்களைப் போலவே
நானும்
உன் நினைவுகளை தீபங்களாக
என்னுள் ஏற்றி வைக்கிறேன்
நீ வைக்கும் தீபங்களில்
நானே ஒளியாகிப்போகின்றேன்

December 09, 2008

ஏழு சுவரங்களில்
உருவான இசையை
நீ புது சுவரத்தில்
எனக்கு கற்றுத்தருகிறாய்
பாதை தெரிகிறதோ இல்லையோ
பாதையில் இருக்கும்
உன் கால் சுவடுகள்
நன்றாகவே தெரிகின்றன
நீ பேசும் வார்த்தைகள்
ஏற்கனவே தமிழில் இருக்கின்றனவா
இல்லை
எனக்கு புதிதாய் தோன்றுகின்றனவா?
உன்னுடைய
பல பிம்பங்களை வைத்திருக்கும்
என் கண்களுக்கு
இன்னும் புது பிம்பங்களின்
தேடல் குறையவில்லை
நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம்
துடிப்பதை விட்டு விட்டு
உன்னை வேடிக்கை பார்க்க
ஆரம்பித்து விடுகிறது
என் இதயம்

December 08, 2008

எல்லா முத்தங்களையும்
அந்த பொம்மைக்கே கொடுத்துவிடாதே
எனக்கும் கொஞ்சம் மிச்சம்வை
நீ உறக்கத்தில்
என் பெயர் சொல்லி
புலம்புவதைக் கேட்கத்தான்
நான் அந்த பொம்மையை
அனுப்பி வைத்திருக்கிறேன்
நீ இந்த பொம்மையை
வைத்து செய்யும்
வேடிக்கைகளைப் பார்க்கும்போது
எனக்கே
பொம்மையாகிவிடத் தோன்றுகிறது
நான் அனுப்பிய எல்லா செய்திகளையும்,
உன்னிடம் வந்து சேர்ந்த பின்
அந்த பொம்மை மறந்துவிட்டது.
நீ கொஞ்ச ஆரம்பித்த பின்
அந்த பொம்மைக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?
உனக்கு
விளையாட பொம்மை
வாங்கிக் கொடுத்தது என் தவறு
என்னை விட்டு
நீ அதையே
கொஞ்சிக்கொண்டு இருக்கிறாய்
பத்துத் திசைக்கும் வைத்த
காவலைத் தாண்டி வந்து
என் மனதைத் திருடிப்போன
கொள்ளைக்காரி நீயேதானடி
தெற்குச் சீமையிலிருந்து
வரும் ராஜாக்கள் போல்
நீ எந்த திசையிலிருந்து
வந்த இளவரசி?
நீ வந்ததிற்க்குப் பிறகு
என் வானில் மேற்கேதான்
சூரியன்கள் உதிக்கின்றன
கிழக்கே உதிக்கும் சூரியனைப்போல்
எனக்குள் உதித்த நீ
எனக்குள்ளேயே பரவிப்போனாய்
வடக்கிருந்து உயிர் விடுவது
வரலாற்றில் நடந்த ஒன்று
வடக்கிருந்து உயிர் வாழ்வது
இப்போது நடக்கும் ஒன்று,
என் வடக்கே உன் வீடு

December 05, 2008

நீ அணைத்துத் தூங்கும்
உன் செல்லத் தலையணைக்கு
இன்னும் சிலநாட்களில்
ஓய்வு வரப்போகிறது
எனக்காக உன் கால் கொலுசில்
எத்தனை பாடல்களை
சேர்த்து வைத்திருக்கிறாய்?
ஒரு வருடம் கழித்து
இப்போது நீ எப்படி இருப்பாய்?
பிறக்கும் குழந்தைக்கு
இருக்கும் அம்மாவின் ஆர்வம்
எனக்கும் வந்துவிட்டது
ஆக்கப் பொறுத்தவனுக்கு
ஆறப் பொறுக்காதாம்
இங்கேயும் அதே கதைதான்
முன்னூறு நாள் பொறுத்தவனுக்கு
முப்பது நாள் பொறுக்கமுடியவில்லை
வைத்து விட என் கை இல்லாமல்
போன உன் கூந்தலும்,
வைக்க கூந்தல் இல்லாமல்
போன என் கைக்கும்
நாம் சந்திக்கும் நாளே நன்னாள்
நீண்ட நாளுக்கு பிறகு
உன்னைப் பார்க்கும் எனக்கு
உன் வெட்கத்தைப்
பரிசாகத் தருவாயா?
இனிமேல் நிலவுக்கு
நம்மிடம் தூது போகும்
வேலை இருக்கப்போவதில்லை,
நான் என் நிலவைப்
பார்க்கப்போகின்றேனே
நான் இல்லாமல்
நீ தனியே நடந்துபோன பாதையிடம்
நாம் திரும்ப ஒன்றாக
நடக்கப்போகும் நாள் வந்துவிட்டது
என்று சொல்லிவை
என் கைகளுடன் ஒட்டியிருக்கும்
உன் கைரேகைகள்
இப்போது எப்படி இருக்கின்றன?
என் கைரேகைகள்
நலம் விசாரிக்கின்றன
நான் உன்னிடம் கொடுத்துவைத்த
என் மனது எப்படி இருக்கிறது?
அதனிடம் சொல்லு
நான் சீக்கிரம் வருகிறேன் என்று
நீண்ட நாளுக்கு
பிறகு உன்னைப்பார்க்கும்
என் கண்ணுக்கு
அழாமல் இருக்க சொல்லிக்கொடேன்

December 04, 2008

பூமிக்கு இயற்கை
காலத்தை நிர்ணயிப்பதைப்போல்,
எனக்கு நீ
காலத்தை நிர்ணயிக்கிறாய்
இலையுதிர் காலத்திலும் கூட
என் மரங்கள் பூக்களை
உனக்காகப் பூத்து வைக்கின்றன
நீ எனக்காக
வரும் வசந்த காலம்,
நீ வராமல் போகும் நேரம் எல்லாம்
என்னுடைய கோடை காலம்
நீ என்னில்
பெய்யும் மழைக்காலம்,
உன் காதல்
என்னை நனைத்துப்போகிறது 
நீதான் என் கற்காலம்,
உன்னில்தான் நான்
உருப்பெற்றிருக்கிறேன்

December 02, 2008

பாட்டியையும் நரியையும்
ஏமாற்றி வடையைத்திருடிய
காகம் போலவே
என்னையும் ஊரையும்
ஏமாற்றி என் மனதைத்
திருப்போனவள் நீ
கற்களைப்போட்டு நீரை எடுத்த
காகம் போலவே
என் கடிதங்களைப்போட்டு
உன் காதலை எடுத்திருக்கிறேன்
ஆமையிடம் தோற்றுப்போன
முயலைப்போல்
உன் காதலிடம் நான் தோற்றுப்போனேன்
நீரில் தத்தளித்த எறும்புக்கு
இலை போட்ட பறவையைப்போல்,
தனியே இருந்த எனக்கு
நீ உன் காதலைத் தந்து
என்னைக் கரை ஏற்றிவிட்டாய்
நான் விறகு வெட்டும் விறகுவெட்டி
நீ எனக்கு வரங்கள் தரும் தேவதை
எனக்கு கோடாலிகள் வேண்டாம்
என்னைக் கொய்யும் உன் பார்வைகள் வேண்டும்