January 31, 2012

என் நீ, உன் நான், நம் அவன்

பூஜ்ஜியமாவது ஆண்டு:

முத்தங்களுக்கும் அணைப்புகளுக்கும்
பஞ்சமில்லா காலம் அது

மழை காலங்களில் தேநீரை விட
முத்தங்கள் இதம் தந்தன

இரவு நேரங்களுக்கு
உன் வெட்க வர்ணங்கள் பூசப்பட்டன

முதலாம் ஆண்டு:

பேசக்கற்றுக் கொண்ட நம் மகனுக்குக்
கிடைத்தன கொள்ளை முத்தங்கள்

உன் புடவைத் தலைப்பில்
முழுதாய்க் குடிவந்தான் அவன்

உன் முக்கால்வாசி இரவுகள்
அவனுக்கு விற்கப்பட்டன

இரண்டாம் ஆண்டு:

உன் பாதிப் பயணங்கள்
அவனுக்காகவே ஆகின

உன் கைரேகைகள் அவன் கையெங்கும்
அவன் கால்ரேகைகள் புவியெங்கும்

பாதி சாதமும், மீதம் முத்தமாய்
வளர்ந்து போனான் அவன்

மூன்றாம் ஆண்டு:

உன் சோற்றுப் பருக்கைகள்
அவனுடன் ஓடித் தோற்றுப் போயின

உன் முகத்தில் சேற்று ஓவியங்கள்
வரையும் ஓவியன் ஆனான் அவன்

கொடிகளில் உன் புடவை வாசம் போய்
அவனின் மழலை வாசம் வீசியது

நான்காம் ஆண்டு:

அவனின் பள்ளிப் பாடங்கள்
உன் வீட்டுப் பாடங்கள் ஆகின

எழுத்துக்கள் வரையப்பட்டன,
ஓவியங்கள் எழுதப்பட்டன அவனால்

அவனின் பகல்ப் பொழுது கதைகள்
என் இரவுத் தாலாட்டுகள் ஆகின

ஐந்தாம் ஆண்டும் அதற்குப் பிறகும்:

ஒருபுறம் உன் முத்தங்கள் பறிபோயின
மறுபுறம் அவனுக்கு முத்தங்கள் ஊட்டப்பட்டன

ஒருபுறம் உன் அணைப்புகள் பறிபோயின
மறுபுறம் அவனுக்கு உன் அணைப்பே உலகானது

ஒருபுறம் உன் வெட்கங்கள் பறிபோயின
மறுபுறம் அவனுக்கு உன் தாய்மை சொத்தானது

எனக்கான உன்னிடம் நான் இழந்தது எல்லாம்
நமக்கான அவனுக்காகத்தானே

தோளுயர வளர்ந்தும் அவன்
நமக்கான அவனே,
நரை விழுந்தும் நீ
எனக்கான அவளே..

நம் ரகசியங்களோடு ரகசியம் பேசும்
உன் கொலுசுகள் எப்படி இருக்கின்றன?
ரகசிய மௌனங்கள் இப்போது
மௌன ரகசியங்களாய் ...
உன் முத்தங்கள் இல்லாததால்
மடிந்து விடிந்தும், விடிந்து மடிந்தும்
போகின்றன என் இரவுப் பொழுதுகள்
உன் புடவை வாசம் இல்லா நாட்களில்,
என் சுவாசங்கள் நின்று போகின்றன.
வாசமும் நீயே, சுவாசமும் நீயே
நீ இல்லாத நாட்களில் பெய்யும் மழை
ஊரை நனைய வைத்தும்
என்னை எரிய வைத்தும் போகிறது
என் கன்னங்கள் உன் இதழ்களின் ரேகைகளையும்
என் கைகள் உன் கைகளின் ரேகைகளையும்
தேடும் ஒரு அமைதியான இரவின் நிமிடம் இது.
ஏக்கத்தைக் கரைக்கிறேன், பெரு மூச்சுகளில்

January 29, 2012

என்னையும் உன்னையும் பார்த்து
சுற்றும் புவிக்கு கொஞ்சம் பொறாமைதான்,
எனக்கு மட்டும்
மாதத்தின் முப்பது நாளும் பௌர்ணமிதான்

January 25, 2012

நானும் ஒரு அமெரிக்க மாப்பிள்ளை

பல ஆண்டுகளுக்கு முன்:

மாமன் மகள், கல்லூரித் தோழி, ஒரு தலைக் காதலி
இப்படி எல்லோருமே
அமெரிக்க மாப்பிள்ளையை மணந்தும்
சொந்தங்களை துறந்தும் போன காலம் அது.

வேலைக்கும் கௌரவத்திற்கும் மட்டுமல்ல
திருமணத்திற்கும் கூட
அமெரிக்கா
ஒரு அடிப்படைத் தகுதியாய்ப் போயிருந்தது

எல்லோருக்கும் போல
என் வாழ்க்கை நூலிலும் வந்தது
அமெரிக்கப் பயணம் எனும்
சில வண்ணப் பக்கங்கள்

ஆரம்பித்தது என் பெண் பார்க்கும் படலம்.
ஜாதகம் எனும் கடிவாளத்தில்
எனக்கான பெண்களின் பாதை
பரிதாமாய் குறுகிப் போனது

சில ஆண்டுகளுக்கு முன்:

விவசாயமும் புஞ்சை நிலத்தோடும்

வந்த ஒரு பெண்ணுக்கு,

வீட்டு மாப்பிள்ளைதான் வேண்டுமாம்.

என் சொந்த வீடே
வருட தொலைவில் இருக்கும்போது,
அவளுக்கு மட்டும் நான்
எப்படி வீட்டு மாப்பிள்ளை ஆகமுடியும்?

சில மாதங்களுக்கு முன்:

எங்க ஊர் ஆசிரியரின் ஒரே பெண்ணுக்கு
அவளின் அப்பா போல்
அரசாங்க மாப்பிள்ளைதான் வேண்டுமாம்

கல்விக்கடனை இன்னமும் மீதம் வைத்திருக்கும்
அரசாங்கக் கடனாளி நான்,
எங்கிருந்து அரசாங்க ஊழியன் ஆவது?

சில வாரங்களுக்கு முன்:

நகரத்தில் மருத்துவம் படித்த பெண் ஒருத்திக்கு
வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை
எடுக்கும் மாப்பிள்ளைதான் வேண்டுமாம்.

வாங்கிய வேலைக் கடனுக்கு,
சனிக்கிழமைகளை வட்டியாய்க் கட்டிக் கொண்டிருக்கும்
நான் எங்கு போவது ஒரு மாத விடுமுறைக்கு?

சில நாட்களுக்கு முன்:

அமெரிக்காவின் எதோ ஒரு மாகாணத்தில்
வசிக்கும் எனது ஊர் மங்கை ஒருத்திக்கு
நிரந்தரக் குடியுரிமை மாப்பிள்ளைதான் வேண்டுமாம்

ஊழிய ஒப்பந்தத்தோடு ஓடும்
என் வாழ்கையில்
உன்னோடு எப்படி உல்லாசப் பயணம் போவது?

சில மணிகளுக்கு முன்:

புதிதாய்த் திருமணமான தோழனிடமிருந்து
வந்திருக்கிறது ஒரு மின்னஞ்சல்
கூடவே அவனின் தேனிலவுப் புகைப்படங்களும்

அமெரிக்கா வாசம் ஒரு முனையிலும்
ஜாதகக் கட்டங்கள் மறு முனையிலும்
நடுவே மாட்டிக் கொண்ட பம்பரமாய் நான்

சில நிமிடங்களுக்கு முன்:

மனதில் இருந்த சில வருடத்தின் மொத்த கவலைகளை
ஒரு சுருட்டின் புகையில் கரைத்துவிட்டு
அடுத்தக் கவலைக்கு தயாராக ஆரம்பித்து விட்டேன்

ஜாதக வைக்கோல் போரில்
தொலைத்த திருமண ஊசியைத் தேடும்
அமெரிக்கா மாப்பிள்ளைகளில்
ஆயிரத்தில் ஒருவனாய் நான்..

January 24, 2012

6.30 மணி நிலவு

யாவரும் காதலிக்க
கருப்பும் வெள்ளையுமாய் ஒரு நிலவு,
நான் மட்டுமே காதலிக்க
வண்ணமாய் ஒரு நிலவு நீ

January 22, 2012

முதல் காதலும், காதலிகளும்

முன் குறிப்பு:

இக் கவிதையில் வரும் ஆண்டுகள் என்னிடம் இருந்தும், காதல் கதைகள் நான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை..

எவ்வயதிலும் வரும் முதல் காதல், எப்போதுமே சிறப்பு - என்பதே இந்தக் கவிதையின் உள் நோக்கம்.. வேறு எந்த எண்ணத்தையும், நீங்கள் உணர்ந்தாள் அது தற்செயலே..

கி.பி 1994 - ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு

என் பாடப் புத்தகத்தில் நீ வைத்த
வண்ண மயில் இறகுகள்
நமக்கான காதலை வளர்த்தன

வீட்டுப் பாடம் செய்யாத
நீ வாங்கிய பிரம்படிகளை
என் கண்ணீர்த் துளிகளில் தாங்கிக் கொண்டேன்

எட்டாம் வகுப்பு முடிந்து வந்த விடுமுறையில்
புடவை கூட கட்டத் தெரியாத உன்னை
உன் முறை மாமனுக்கு கட்டிவைத்தார்கள்

யாரிடம் சொல்லி அழ?
உன் பாலியல் திருமணம் வைத்தது
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி


கி.பி 1999 - பதினொன்றாம் வகுப்பு 'ஆ' பிரிவு

கணக்குப் பாட முதல் மதிப்பெண்ணுக்காக
உன்னிடம் ஒரு போட்டி,
இருவரையும் காதல் வென்றது

நம் இரட்டை மிதிவண்டிகளும்
சென்றது என்னவோ
உன் வீடு எனும் ஒற்றை திசையில்

மருத்துவம் படிக்க நீயும்
பொறியியல் படிக்க நானும் பிரிந்தோம்,
இறுதியில் பிரிந்தே விட்டோம்

யாரிடம் சொல்லி அழ?
நமக்கிடையே இருந்த தொலைவு வைத்தது
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி

கி.பி 2003 - பொறியியல் முதலாம் ஆண்டு

வகுப்பின் முப்பது மங்கைகளில்
உனைப் பார்த்துதான் எழுத ஆரம்பித்தேன்
என் முதல் காதல் கவிதைகளை

உன்னோடு சேர்ந்து வாழ்ந்த
கல்லூரி ஆண்டு விழா நாட்கள் எல்லாம்
என் காதல் தேச திருவிழா நாட்கள்

நான்கு வருட ஒரு தலைக் காதலுக்கு
கல்லூரியின் இறுதி நாள் மட்டும்
தைரியம் வந்துவிடுமா என்ன?

யாரிடம் சொல்லி அழ?
வேலை கிடைக்காத என் படிப்பு வைத்தது
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி

கி.பி 2006 - கணினிப் பொறியாளன்

வேலைக்கான பயிற்சி நாட்களில்
நான் கற்றுக் கொண்டதென்னவோ
உன்னைப் பற்றித்தான்

அலுவலகத்தின் சிற்றுண்டியிலும் பேருந்திலும்
என் இருக்கையின் பாதியை நீ பறித்தபோது
முழுதுமாய் என்னை இழந்தேன் உன்னிடம்

சாதி வானவில்லை தேசியச் சின்னமாய்
வைத்திருக்கும் உன் தகப்பனிடம்
நிறமிழந்து போனது என் காதல்

யாரிடம் சொல்லி அழ?
உன் சாதியின் முதல் அயல்நாட்டு மாப்பிள்ளை ஒருத்தன் வைத்தான்
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி


கி.பி 2008 - அயல்நாட்டு கணிப்பொறி வாசி

அயல்நாட்டு தேச அழகிகளின் நடுவிலும்
நீதானடி எப்போதும் பேரழகி,
உன்னை புகைப்படம் எடுத்தே, நான் கலைஞனும் ஆனேன்

இந்த தேசத்தில் எல்லா ஊர்களின்
எல்லாக் காதல் கல்வெட்டுக்களிலும்
நம்மையும் சேர்த்து செதுக்கினோம்

ஒப்பந்த ஊழியன் நான்
தேசக் குடியுரிமை பெற்றவள் நீ,
என் காதலில் முதல் விரிசல் இங்கேதான்

யாரிடம் சொல்லி அழ?
ஒப்பந்தம் முடிந்து நான் ஊருக்குப் போகும் விதி வைத்தது,
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி

கி.பி 2010 - முழு நேரக் கவிஞன்

என் கவிதைகளை நீயும்
கவிதை உன்னை நானும்
வாசித்துப் பழகிய பொன் நாட்கள் அவை

என் எல்லாக் கவிதைகளும் உன்னையே வரைந்தன
என் எல்லா ஓவியங்களும் உன்னையே பாடின
என் நீயும், உன் நானுமாய் எல்லாமே

கவிதைகள் சொல்லிய என் காதலை எல்லாம்,
உன் மௌனம் என்னிடமே
திருப்பிக் கொடுத்துவிட்டது

யாரிடம் சொல்லி அழ?
உன் மெளனத்திடம் தோற்றுப்போன என் கவிதைகள் வைத்தன,
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி

------------------------

எல்லா முதல் காதலும் இனிக்கத்தான் செய்கின்றன ...
எல்லா முதல் காதலும் வலிக்கத்தான் செய்கின்றன...

முதல் காதலிகள் எல்லாம்
இரண்டாம் முறையாக அம்மாக்கள் ஆகிவிட்டார்கள்,
ஆனால் எனக்கும் மட்டும்,
அவர்கள் இன்னும் முதல் காதலியாய்த்தான் இருக்கிறார்கள்

எந்தக் கவிதை
எந்தக் காதலியைப் பற்றிப் பாடுகிறது?
என் பேனாவோடு நின்று போகட்டும் அந்த ரகசியம்...

வழக்கம் போல காலம் பரிசளிக்கும்
அடுத்த முதல் காதலுக்காக
என்னுடைய அடுத்த காத்திருப்பு......
வரும் தேவதையை வரவேற்க, வாயிற்க் காவலனாய் என் பேனா ...

January 20, 2012

அந்நிய தேசத்தில் குடியேறிய கணினிக்கு வாக்கப்பட்ட, ஒரு காதல் மனைவி நான்

காலை 6.00 மணி:
முத்தங்களால் உன்னை எழுப்ப முனைகிறேன்,
காற்று அறியும் என் முத்தங்களை, உன் கன்னங்கள் ஏனோ அறியவில்லை

காலை 7.00 மணி:
இன்றைக்கு சமைத்த புதினாத் துவையல் மிக அருமை,
அலுவலக அவசரம் உனக்கு, புதினாவுக்கு புதிதாய் ஏதோ பெயர் வைக்கிறாய்

காலை 8.00 மணி:
வாசல் வந்து வழி அனுப்புகிறேன், கண்களில் நீரோடு
அலுவலக தொலைபேசியை அணைத்து, என்னை மறந்து போகிறாய்

காலை 9.00 மணி:
நீ போனபின் இருண்டு போய் விட்டது என் உலகம்,
இன்றைக்கும் என் காதல் தோற்றுப்போய் விட்டது.

காலை 10.00 மணி:
என் அம்மாவிடம், பொய்யாய் உன்னைப் பற்றி நான்கு வரிகள்
என் தோழியிடம், பொறமைக்காக அமெரிக்கா பற்றி நான்கு வரிகள்

முற்பகல் 11.00 மணி:
இன்றைக்கும் ஆசை ஆசையாய் உனக்கு ஒரு சமையல்,
எப்போது நீ வரப் போகிறாய், என்பது வழக்கம் போல ஒரு புதிர்தான்

பகல் 12.00 மணி:
மனதெங்கும் உன் வாசனையைப் போல
என் சமையல் வாசனை வீடெங்கும் பரவிக்கிடக்கிறது
நம் வீட்டுக் கதவில், உனக்காக தவமிருக்கின்றன என் கண்கள்

பகல் 1.00 மணி:
நொடிகளில் நிமிடங்களைத் தேடும் அவசரத்தோடு மதிய உணவு உனக்கு,
இன்றாவது பாராட்டி ஒரு வார்த்தை சொல்வாயா?

பிற்பகல் 2.00 மணி:
மீண்டும் அதே ஏமாற்றத்தோடு, தனியே அமர்கிறேன்
எங்கே போயின, நீயும் நானும் காதலித்த பழைய நாட்கள்?

பிற்பகல் 3.00 மணி:
நீ இல்லாத நிமிடங்களை, கொலை செய்ய தூக்கக் கத்தியைத் தேடுகிறேன்
நீ இல்லாத முள் படுக்கையில், தூக்கத்திற்கும் எனக்கும் நடக்கிறது ஒரு போராட்டம்

மாலை 5.00 மணி:
வீட்டை சுத்தம் செய்தலாவது மீண்டும் சில மணிகள் சாகும்
மடித்து வைக்கும் உன் சட்டைகளில், எங்காவது இருக்கிறதா என் குங்குமம்?

மாலை 7.00 மணி:
களைத்துப் போய் வரும் உன்னிடம், எப்படிக் கேட்பது அணைக்கச் சொல்லி?
என் மடியில் உனக்காக ஒரு இடம் இருந்தும், உன் மடியில் கணினிக்குத்தான் முழு இடமும்

இரவு 8.00 மணி:
அடுப்போடு நானும், கணினியோடு நீயும் வசிக்கிறோம்
சமையலறை நான் மட்டுமே வசிக்கும் உலகம் ஆகிவிட்டது

இரவு 9.00 மணி:
ஒற்றை உணவு மேசையில் இரண்டு துருவங்களாய் நீயும் நானும்
உணவை மறந்து, தொலைக்காட்சியின் நிகழ்ச்சியை நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய்

இரவு 10.00 மணி:
முத்தத்திற்கும் அணைப்புக்கும் ஏங்கி தனியாய் நான் படுக்கையில்,
அலுவலக தொலைபேசி மனைவியிடம் நடத்துகிறாய், உன் தாம்பத்யங்களை.

இரவு 11.00 மணி:
இன்றைக்கும் தலையணை நனையப் போகிறது என் கண்ணீரில்,
காதல் சொர்க்கத்தை, அந்நிய தேசத்தில் விற்ற அப்பாவி மனைவிகளில் நானும் ஒருத்தி

January 18, 2012

நம் முதல் நெருக்கக் காவியத்திற்கு,
முன்னுரை இந்த முத்தம்.
இது நம் முதல் நெருக்கம்
கைகளால் எனை விலக்குகிறாய்
விழிகளால் எனை நெருக்குகிறாய்
இது நம் முதல் நெருக்கம்
என் ஆடைகளில் உன் குங்குமம்,
உன் ஆடைகளில் என் வாசனை,
நம் ஆடைகளில் மீதமுள்ள வெட்கங்கள்.
இது நம் முதல் நெருக்கம்
நீ மட்டுமல்ல
நமக்கு இடையில் இருக்கும்
தென்றலும் கூட நனைகிறது வெட்க மழையில்.
இது நம் முதல் நெருக்கம்
கவிதையின் நெருக்கத்தில்,
எனை நெருக்கும் கவிதைகள்.
இது நம் முதல் நெருக்கம்

January 17, 2012

தீபாவளி ஆடைக்குக் காத்திருக்கும்
ஏழை மகனைப் போல் ஆகிவிட்டேன்,
அடுத்த முத்தம் எப்போதடி?
இது நம் முதல் முத்தம்
உன் இதழ்களின் ஒற்றை அலையில்
கவிழ்ந்துபோனது என் மனக் கப்பல்.
இது நம் முதல் முத்தம்
எதிர்பாராத வினாடிக்கும்
பிரம்மித்த வினாடிக்கும்
இடைப்பட்ட நடந்துபோனது ஒரு திருவிழா.
இது நம் முதல் முத்தம்
உன் இதழ்கள் எனும் இரட்டைக் கவிஞர்கள்
என் உயிரியல் மொழியில் எழுதும்
முதல் காவியம் இது.
இது நம் முதல் முத்தம்
நீயும் கூட
கவிதை எழுதக் கற்றுக் கொண்டாய்,
இது நம் முதல் முத்தம்

January 16, 2012

என் பகல்கள் உன் இரவு அணைப்புகளையும்
என் இரவுகள் உன் பகல் முத்தங்களையும்
தொலைத்துவிட்டுத் தவிக்கின்றன
என் தேவி உன்னை ஒருபுறமும்
என்னை மறுபுறமும் பிரித்து வைத்துக் கொண்டு,
எப்படி காதலை வாழ வைக்கப்போகிறது
இந்த பூமிப்பந்து?
குளிர்கால நெருப்பாய் உன் காதல்,
நெருங்கவும் முடியவில்லை
விலகவும் முடியவில்லை.
இருந்தபோதிலும் என் தனிமைக் குளிருக்கு
உன் காதல் நெருப்பு ஒரு கட்டாய அவசியம்தான்

January 10, 2012

என் அலைகள் எல்லாம் உன் பாதங்களையும்,
என் சொற்கள் எல்லாம் உன் சம்மதத்தை நோக்கியும்
எதிர்பார்க்கும் காலம்
இது என் காதலைச் சொல்லும் காலம்

January 09, 2012

நீ வளர்க்கும் கிளிகள்
நம்மைப் பார்த்து காதல் பாடம் கற்றுக் கொள்கின்றன.
இது காதல் பெய்யும் ஒரு ஞாயிற்றுக்கிழமை
நாள்முழுதும் சமையலறை வசம் இருக்கும் நான்
நாள் இறுதியில் இருப்பது உன் புடவை வசத்தில்.
இது காதல் பெய்யும் ஒரு ஞாயிற்றுக்கிழமை
உன் கூந்தலுக்கு நீராபிஷேகம்
செய்யும் பக்தன் நான்,
தீர்த்தங்களில் என் தாகங்கள் தீர்ந்து போகின்றேன்.
இது காதல் பெய்யும் ஒரு ஞாயிற்றுக்கிழமை
நீ மருதாணி வைத்துக்கொண்டாய்,
நீயும், என் அங்கமும் தான்
சிவந்து போனோம்.
இது காதல் பெய்யும் ஒரு ஞாயிற்றுக்கிழமை

January 08, 2012

உன் முத்தங்களுக்கு நீ
இரவுத் தடை விதித்துவிட்டாய்.
என் முத்தங்கள் நம் முற்றத்துக் காற்றில்
கரைந்து கொண்டிருக்கின்றன
யாரோ சதி செய்கிறார்கள்.
ஓரடி இடைவெளியில் நீயும்,
பல அடி இடைவெளியில் நிலவும்,
என் இரவை எரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
யாரோ சதி செய்கிறார்கள்.
நான் தவமிருக்கும் நாட்களில் மட்டும்
உன் பொல்லாத உலகம்
மெதுவாக இருட்டுகிறது, விரைவாக விடிகிறது.
யாரோ சதி செய்கிறார்கள்.

January 05, 2012

தகப்பன் பெயருக்குப் பதிலாய்,
கணவன் பெயரை, நீ சேர்த்துக்கொண்டும் கூட
என் அலைபேசியில் இருக்கும்
உன் செல்லப் பெயரை மாற்ற மனம் வரவில்லையடி எனக்கு.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்
மெலிதாய் எரிந்த உன் மணமேடைக் குண்டத்தில்
புகையோடு சேர்ந்து கருகிப் போனது என் காதல்.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்
மனைவிடம் நினைத்த நேரத்தில் கிடைத்தும்
நீ கொடுத்துவிட்டுப் போன முதல் முத்தம்
என் நினைவிலிருந்து இன்னும் மறையவில்லை.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்

January 04, 2012

கணவன், மாமியார் என புதுச் சொந்தங்களோடு நீ,
எல்லோரையும் இழந்து அனாதையாய் நம் காதல்.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்
நீ மட்டும் இரு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாய்,
கருத்தரிக்காமலே போய் விட்டது நம் காதல்.
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்
எத்தனை பேருக்குத் தெரியும் என் காவியங்களின்
முன்னுரை பக்கம் நீதானென்று?
முதல் காதலை இன்னும் காதலிக்கிறேன்